Tuesday 10 January 2012

டிஸம்பர் கச்சேரி ரசிகர்களுடன் மும்மூர்த்திகள்

டிஸம்பர் கச்சேரி ரசிகர்களுடன் மும்மூர்த்திகள்

இடம்: சுவர்க லோகம்

மும்மூர்த்திகளான திருவாளர்கள் ஷ்யாமா சாஸ்திரி, தியாகராஜா சுவாமிகள் மற்றும் முத்துசாமி தீக்ஷதர் காலை உணவிற்குப் பின் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பொருள்: டிஸம்பர் மாதத்தில் பூலோகத்தில் நடக்கும் சங்கீதக் கச்சேரிகளில் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்தல். உரையாடல் இவ்வாறாகச் சென்றது.

தியாகராஜா: நாம் மூவரும் இங்கு வந்து கிட்டத்தட்ட 160-170 வருடங்கள் ஆகி விட்டன. பூலோகத்தில் ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதத்தில் பல இடங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடை பெறுகின்றன. ஒரு தடவை கூட நமக்கு அங்கு போவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வருடமாவது சென்று வரலாமென்று ஆசையாக உள்ளது. நீங்கள் இருவரும் வந்தால் நல்ல துணையும் இருக்கும், கச்சேரிகளையும் நன்றாக ரசிக்க முடியும்.

மற்ற இருவரும் (ஷ்யாமாவும், முத்துசாமியும்): கரும்பு தின்பதற்கு கூலியும் கிடைத்தது போல் உள்ளது. நாங்கள் தயார். ஆனால் எப்படிப் போவது?

தியாகராஜா: ஏன், நமக்குத் தான் இங்கிருந்து வெளியே செல்லும் உத்தியைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களே, இங்கு இருக்கும் மூன்று திருமூர்த்திகளும். அப்படியே செல்வோம். ஆனால், நான் என்னுடைய தம்புராவை எடுத்து வரலாமென்று இருக்கிறேன்.

முதலில் சென்னை செல்வோம், அங்கே, நிறைய சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுகின்றன என்று கேள்விப் பட்டேன்.

மற்ற இருவரும்: சரி, புறப்பிடலாம்.


இடம்: பாரத கான சபா, சென்னை, பூலோகம்
நேரம்: இரவு 7 30 மணி அளவில்

மும்மூர்த்திகளும் தாங்கள் எப்போதும் உடுத்துவது போல் பஞ்ச கச்ச வேஷ்டி தரித்து வந்திருந்தனர். தியாகராஜா மட்டும் தன் தம்புராவை வைத்துக் கொண்டிருந்தார். உட்கார இடம் கிடைப்பதைப் பற்றி பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆகவே, அவர்களுக்குக் கூட்டத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து கொள்வதில் ஒரு உபத்திரவமும் இல்லை.

கச்சேரி ஆரம்பித்து வித்வான் ‘நந்நு ப்ரேவூ லலிதா--- ‘ என்ற கீர்த்தனையை பாடிக் கொண்டிருந்தார்.

தியாகராஜா: அண்ணா ஷ்யாமா, வித்வான் உங்கள் கீர்த்தனையைத்தான் பாடிக் கொண்டிருக்கிறார்.

முத்துசாமி: ஆகா, வசந்த ராகம் மிக வசந்தமா காதில் கேட்கிறது. அவ்வளவு தொலைவில் இருந்து வித்வான் பாடுகிறார். நமக்கு இங்கு வரை காதில் கேட்கிறது. இது எப்படி சாத்தியம்?

ஷ்யாமா: ஆமாம், ஆமாம்... எனக்கும் கேட்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், எனக்கு ஒன்று புரியவில்லை. மேடையில், கிட்டத்தட்ட 10 பக்க வாத்தியங்கள் உள்ளன. ஒருவர் நின்று கொண்டே கைகளால் ஏதோ ஒரு வாத்தியத்தை உபயோகப் படுத்துகிறார்.
(தன் பக்கத்தில் இருந்த ஒரு ரசிகரிடம் அதைப் பற்றிக் கேட்கிறார்).

ரசிகர்: அதான் ஸார், கீ போர்ட். அது இல்லாமல் இந்தப் பாட்டு கேட்பதற்கு அவ்வளவு சுகமா இருக்காது. அதான், பாடகர் வேண்டுமென்றெ அதை யூஸ் பண்ணுகிறார்.

ஷ்யாமா: என்ன? தியாகராஜா, உனக்குப் புரிகிறதா? நாமெல்லாம் பாடும் காலத்தில், நமக்கு ஒரு வாத்தியமோ அல்லது இரண்டு வாத்தியங்களோதான் பக்க வாத்தியங்களாக இருந்தன. இப்போது, பக்க வாத்தியங்களை நம்பித்தான் பாடகர்களும் பாட வேண்டும் போல் உள்ளது.

தியாகராஜா: ம்ம்ம்--- (பெறு மூச்சு விட்டார்). புரிகிறது; இப்போது, பாடுவது ஜன ரஞ்சமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இது போன்ற பாட்டுக்களை கேட்பதற்கு ரசிகர்கள் வர மாட்டார்கள் போலுள்ளது.

முத்துசாமி: அங்கே பாருங்கள், பாட்டு முடியும் முன்பே நிறைய ரசிகர்கள் வெளியே சென்று கொண்டிருக்கின்றனர். என்ன என்று கேளுங்கள், ஷ்யாமாண்ணா?

ஷ்யாமா: (பக்கத்தில் இருக்கும் ரசிகரைப் பார்த்து) ஏன் நிறைய ரசிகர்கள் பாதி பாட்டு கேட்கும் போதே வெளியே போகிறார்கள்?

ரசிகர்: ஓ, அதுவா! இந்த பாட்டு முடிந்தவுடன், சற்று இடை வேளை விடுவார்கள். அதற்கு முன்பாக வெளியே சென்றால்தான், கூட்டத்தில் நெரியாமல், வடை, பஜ்ஜி முதலியவற்றை சுடச்சுட வாங்க முடியும். இன்று குடந்தை அறுசுவை ராஜாதான் கேடரிங்க். அவர் செய்யும் பக்ஷணங்கள் என்றாலே தனி சுவைதான். இன்று கச்சேரிக்குக் கூட்டமும் அதனால்தான் அதிகம் வந்துள்ளது.

முத்துசாமி: ம்,,,,ம், இசைப் பசிக்கு முன் நாக்கு ருசிக்குத்தான் முக்கிய இடம் கொடுக்க வேண்டிய கால கட்டத்தில் இவர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது. மற்றொறு கச்சேரிக்குப் போய் பார்க்கலாமே.
*****************
இடம்: ராம கான சபா, சென்னை, பூலோகம்
நேரம்: இரவு 8 30 மணி

ஒரு இள வயதுள்ள வித்வான்

‘வேகலேசி நீட முனிகி பூதீ பூசி------‘ என்று, ‘தெலிய லேரு ராமா பக்தி மார்க்கமு--‘ பாட்டின் சரணம் பாடிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டே வந்த தியாகராஜாவுக்கு மிக மகிழ்ச்சி உண்டாகிற்று. ஆனால், பாடுபவர் பாடும் விதத்தை பார்த்து, ஏதோ சரியில்லை போல் உணர்வு தோன்றியது.

தியாகராஜா: என்ன, முத்துசாமி, நீங்கள் இவர் பாடும் விதத்தைப் பார்த்து என்ன நினைக்கிறீர்கள்?

முத்துசாமி: நாமெல்லாம் பக்தியை கருத்தில் கொண்டு பாட்டுக்களை இயற்றிப் பாடினோம். அர்த்தத்தை மனதில் இருத்திப் பாடினோம். இவர் பாடும் விதத்தில் அந்த உயிர் இல்லை.
நீங்கள் இந்தப் பாட்டில் மனிதர்களின் மிகப் பெரிய போலித் தன்மையை வெளிப் படுத்தியிருக்கிறீர்கள். பக்தி என்ற பெயரில், மனிதர்கள் காலையில் எழுந்து, வீபூதி பூசி, கடவுளுக்குப் பூசை செய்வார்கள். ஆனால், அவர்களின் மனதோ குறுக்கு புத்தியில் எப்படியெல்லாம் பணமும், பொருளும் ஏற்றலாம் என்ற எண்ணத்திலேயே இருக்கும்.

தியாகராஜா: ஆமாம், அது சரிதான். நான் உஞ்சவிருத்தி எடுத்து என் உணவைப் பெற்று, ஸ்ரீ ராமனின் பக்தியிலேயே என் வாழ்க்கையை ஓட்டி விட்டேன். இந்த காலத்தில், நம் பாட்டுக்களைப் பாடி இவர்கள் தனக்குப் பேரும் புகழும் தேடிக்கொள்கிறார்கள். என்ன செய்ய முடியும்? நம் பாட்டுக்களை இதுவரை பாடிக்கொண்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். என்ன இருந்தாலும், பாடுபவர் மிக இள வயதுடையவர். ஆகவே, அவர் பாடிய விதத்தில் சற்று தொய்வு தெரிந்தாலும் பரவாயில்லை. அடுத்து என்ன பாட்டு பாடுவார் என்று பார்ப்போம்.

முத்துசாமி: (பக்கத்தில் இருக்கும் ரசிகர் ஒருவர் கையில் இருக்கும் காகிதத்தில் எழுதியுள்ளதைப் படித்துக் கொண்டிருந்தார்). அது என்ன உங்கள் கையில்?

ரசிகர்: இதுதான், இன்றைய ப்ரோக்ராம் ஷெடியூல். நீங்கள் பார்க்கிறீர்களா?

முத்துசாமி: (ரசிகர் பேசுவது புரியாது, அதில் எழுதியிருக்கும் பாஷையும் என்ன என்று புரியாது விழித்து) பரவாயில்லை, வேண்டாம். அடுத்து என்ன பாட்டு பாடப் போகிறார்?
ரசிகர்: வித்வான், அடுத்ததாக, வாலி என்ற புலவர் எழுதிய ஒரு பக்திப் பாடலைப் பாடப்போகிறார்.

பாடகர்:
‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே---------‘

பாட்டின் ஒவ்வொறு அடியையும் வித்வான் பாடப் பாட, ரசிகர்களிடையே மிக அமைதியும், பாட்டில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதும் தெரிந்தது.

மும்மூர்த்திகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு சிலர் சிறு துணியைக் கையில் வைத்துக்கொண்டு தங்கள் கண்ணில் வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அறியாமலே மும்மூர்த்திகளின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரத் தொடங்கியது. இப்படியும் ஒரு நெகிழ்வு தரும் பாடலாக இருக்கிறதே என்று வியந்தனர்.

தியாகராஜா: என்ன, ஷ்யாமா அண்ணா, முத்துசாமி, நாம் எவ்வளவோ பாடல்களை இயற்றியிருக்கிறோம். ஆனால், எனக்கு நினைவு தெரிந்து நான் என் அன்னையைப் பற்றி ஒரு பாடல் கூட இப்படி எழுதவில்லை. மிக அருமை, போங்கள். நீங்கள் என்ன நினைக்கிறேள்?

மற்ற இருவரும் (ஷ்யாமாவும், முத்துசாமியும்): ஆமாம், ஆமாம்... நாங்களும் மிக நெகிழ்ந்து விட்டோம். தாய்க்கு இவ்வளவு அன்பும், மதிப்பும் காட்டும் ரசிகர்களிடையே நாமும் ஒன்றாக அமர்ந்து ரசிக்க முடிந்தது நம் பாக்கியம்தான்.

ஒரு ரசிகர் திரு தியாகராஜாவைப் பார்த்து: என்ன நீங்கள் தம்புரா போன்று ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் பெயர் என்ன? உங்களுக்கு எந்த ஊர்? நீங்கள் கச்சேரி எதாவது செய்ய வந்துள்ளீர்களா? உங்களை எங்கோ பார்த்தது போலும் உள்ளது!

தியாகராஜா: (சற்று புன்முறுவலுடன்) என் பெயர் தியாகராஜா. என் சொந்த ஊர் திருவாரூர். நான் வைத்திருப்பது தம்புரா தான். அந்த காலத்துது. நான், மற்றும் இந்த இரண்டு நண்பர்களும் ஒரு காலத்தில் பாடல்கள் எழுதிப் பாடியும் இருக்கிறோம். நீங்கள் எங்காவது புகைப் படத்தில் என்னைப் பார்த்திருப்பீர்கள். சரி, எங்களின் ஆசிகள். நாங்கள் சென்று வருகிறோம்.

முத்துசாமி: நல்ல வேளை, நம்மை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
சரி, சரி, அமெரிக்கா என்ற ஒரு பெரிய நாடு இருக்கிறதாம். அங்கே, கலிஃபோர்னியா என்ற மாவட்டத்தில், இதே போன்று சங்கீதக் கச்சேரிகள் நடை பெறுகிறதாம். இப்போது அந்த நாட்டில் பகல் வேளையாக இருக்கும். ஆகவே, அங்கு சென்று ஒரு சில பாட்டுக் கச்சேரிகளைக் கேட்கலாமா?

மற்ற இருவரும்: ஓ! அப்படியே செய்யலாமே. உடனே புறப்படலாம்.

* * * * * *
இடம்: வில்லித் தெருவில் ஒரு பெரிய கம்யூனிடி ஸெண்டர், ஸந்நிவேல், கலிஃபோர்னியா, பூலோகம்.

நேரம்: காலை 11 00 மணி அளவில்

ஒரு பெண் வாத்திய சங்கீத வித்வான், ஒரு சிறு வீணையைப் போன்ற வாத்தியத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு பாட்டைத் துவங்கும் முயற்சியில் இருந்தார். அந்த சமயம், மும்மூர்த்திகளும் அங்கே நுழைந்தனர்.

பாடலைத் துவங்கும் முன் மிருதங்கத்தைப் பக்க வாத்தியமாக வாசிப்பவருடன் சுருதி சரியாக இருக்கிறதா என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

சுருதிக்காக தம்புரா வாத்தியத்தையே காணோம். ஏதோ ஒரு கருப்பாக இருந்த சிறு பெட்டியில் இருக்கும் கட்டை போன்ற ஒரு சாதனத்தை இப்படியும் அப்பட்டியுமாகத் திருப்பிக் கொண்டிருந்தார்.

சுருதி சரியாக வரவில்லை என்று, ச்---ச்--- கொட்டிக் கொண்டு தன் எரிச்சலை வேறு வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ரசிகர்களிடையேயும் சற்று பொறுமை இழந்த நிலையில் சல சலப்பு தெரிந்தது. பிறகு, ஒரு வழியாக, வாத்திய வித்வான் தன் கச்சேரியைத் தொடர்ந்தார்.

மகா கணபதி பாடல் பாடிய பிறகு, அடுத்தப் பாடலை வாசிக்கும் முயற்சியில் இருந்தார்.

முத்துசாமி ஒரு ரசிகரிடம்: நமஸ்காரம். வித்வான் கையில் இருக்கும் வாத்தியத்திற்குப் பெயரென்ன?

ரசிகர்: (மிக ஆச்சரியத்துடன்) உங்களுக்கு அந்த வாத்தியம் என்ன என்று தெரியாதா? அதான், மேன்டலின். இது மிக ஓல்டு டைப் ஆஃப் இன்ஸ்ட்ருமெண்ட்.

முத்துசாமி: மற்ற இரு நண்பர்களையும் பார்த்தார். அவர்களும், இந்த ரசிகர் கூறியதில் அர்த்தம் பாதி தான் புரிந்தது என்று தங்களுக்குள் மௌனமாக பேசிக் கொண்டு அடுத்து என்ன பாடலை வாசிக்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.

வித்வான்:
‘ஸரஸி ஜனா ப ஸோதரி---------‘ என்ற பாடலைத் தொடங்கினார்.
சுருதி சரியாக சேரவில்லை என்று மனதில் பட்டதால், ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி விட்டார்.

ஓரு ஐந்து நிமிட இடைவேளைக்குப் பிறகு, அதே பாடலைத் திரும்பத் தொடங்கினார்.

ஷ்யாமா: (முத்துசாமியைப் பார்த்து) ஆகா, அந்த காலத்தில் நீங்கள் இந்தப் பாட்டை நாக காந்தாரியில் என்னாமா பாடி இருக்கிறீர்கள். நாம் பாடும் போதெல்லாம், இந்த சுருதி சிரமங்கள் வந்ததில்லை. இப்போ, இவர்கள், பாட்டை விட்டு விட்டு, சுருதி சேர்ப்பதிலேயே பாதி சமயத்தை செலவிட வேண்டியுள்ளது.

வித்வான், வாத்தியம் வாசித்துக் கொண்டே, பாட்டை இயற்றியவரின் பெயரையும் சொன்னார். மேலும், கூடவே, பாட்டையும் பாடிக் காண்பித்தார். தாங்களும் அவ்வாறு பாடலைப் பாடிக்கொண்டே தம்புராவை இயக்கியது நினைவிற்கு வந்தது. ஆகவே, வித்வான் அதே உத்தியை கையாண்டுப் பாடல் பாடுவதைப் பார்த்து, மும்மூர்த்திகளுக்கும் மகிழ்ச்சியும் கச்சேரியில் புது ஆவலும் ஏற்பட்டது.


இடம்: பாலோ ஆட்டோவில் ஒரு கம்யூனிடி ஸெண்டர், கலிஃபோர்னியா, பூலோகம்.
நேரம்: மாலை 04 00 மணி அளவில்

மிக இள வயதில் இருக்கும் இரு வித்வான்கள் பாடிக்கொண்டிருந்தனர். கச்சேரி ஆரம்பித்து சற்று நேரம் ஆகி விட்டது போல் இருந்தது.

தியாகராஜா: என்ன, அண்ணா, இவர்களைப் பார்த்தால், இரட்டையர்கள் போல் இருக்கிறதோ?

ஷ்யாமா: ஆமாம், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. எதற்கும் கேட்போமே என்று கூறி அருகில் உள்ள ரசிகரிடம் “என்ன, இங்கே பாடும் வித்வாங்களின் பெயரென்ன? அவர்கள் இரட்டையர்களா?”

ரசிகர்: ஆமாம், அவர்கள் இரட்டையர்கள்தான். என்ன, உங்களுக்கு அவர்கள் பெயர்கள்கூடத் தெரியாதா? அவர்கள் லவ அண்ட் குசா. இள வயதிலேயே மிக நன்றாகப் பாடும் இள வித்வானகள். நிறைய பரிசுகள் கூட வாங்கியுள்ளார்கள். நீங்கள் என்ன, இந்த ஊருக்குப் புதுசா?

மும்மூர்த்திகளும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு, பதில் ஒன்றும் சொல்லாமல், வித்வானகள் பாடும் பாட்டில் கவனத்தைச் செலுத்தினார்கள்.

வித்வானகள், ஒரு சில பாடல்கள் பாடி விட்டு, திரு ராஜாஜி என்ற மேதை ஒருவர் இயற்றிய

‘குறை ஒன்றுமில்லை நிறை மூர்த்தி கண்ணா--------என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்கள்.

முன்பு, சென்னையில் பார்த்தது போல், இங்கும் ரசிகர் முகங்களில் திடீரென்று ஒரு பிரகாசம் வந்தது. வித்வான்கள், பாட்டைப் பாட, ரசிகர்களும் பாடத் தொடங்கி விட்டனர்.

ஷ்யாமா: என்ன பொருள் பொதிந்த அருமையான பாட்டு! கோகுல கிருஷ்ணணே நேரில் வந்தாலும் ஆச்சரியப் படத் தேவையில்லை. ஆமாம். தெய்வத்தை வணங்குவதில் எந்த வழியாக இருப்பினும் அதில் ஒரு குறையும் இருக்க முடியாது. சரி, நாம் கிளம்பலாமா?

மற்ற இருவரும்: சரி, போகலாம்.
*******

இடம்: ஸ்வர்க்க லோகத்திற்குச் செல்லும் வழி.

தியாகராஜா: ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே---------‘ என்று சென்னையில் கேட்ட பாட்டை மனப்பாடம் செய்யும் முயற்சியில் தன் மனதைச் செலுத்திய வண்ணமே சென்று கொண்டிருந்தார்.

மற்ற இருவரும்: குறை ஒன்றுமில்லை நிறை மூர்த்தி கண்ணா---- பாட்டை ஒரு புது ராகத்தில் பாட முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

மும்மூர்த்திகளின் முகத்திலும் ஒரு புது மகிழ்ச்சி- தாங்கள் எழுதிய பாடல்கள் இன்னும் பாடப் படுகின்றன; ரசிகர்களிடையேயும் அவைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று அறிந்ததால். மேலும், தாங்களும் புதுக் கவிதைகளைத் தெரிந்து கொள்ள இந்த பயணம் ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது என நினைத்தனர்.

தியாகராஜா: நண்பர்களே, நாம் புதுப் பாடல்களையும், புது வாத்தியங்களையும் கற்றுக் கொண்டால் தான் அடுத்த தடவை பூலோகம் சென்றால் இந்த சங்கீதக் கச்சேரிகளை நன்கு ரசிக்க முடியும். ஆகவே, நம் பயிற்சியை நாளையே துவங்கி விடலாம்.

இந்த முடிவுடன் மும்மூர்த்திகளும் தேவலோகத்திற்குத் திரும்பி வந்தனர்.

No comments:

Post a Comment